நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என்று பதில் அளிப்பேன்: பிரேமலதா விஜயகாந்த்!

நேரம் வரும்போது யாருடன் கூட்டணி.. எத்தனை தொகுதிகள் என எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், இப்போது கூட்டணி நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. குறிப்பாக கூட்டணியை அமைப்பதில் திமுக, அதிமுக என இரு தரப்புமே கவனம் செலுத்தி வருகிறது. இதில் தேமுதிக எந்த பக்கம் சாயும் என்பதில் பலருக்கும் கேள்வி இருக்கிறது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவின் முடிவு தேமுதிகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாகவே இருப்பதாக தெரிகிறது. இதனால் கூட்டணி விவகாரத்தில் தேமுதிக அதிரடி முடிவை எடுக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே சென்னையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணி குறித்தே எல்லாரும் கேட்கிறீர்கள்.. எப்போது பார்த்தாலும் கூட்டணி குறித்தே கேள்விகள் வருகிறது. இதற்கு நான் நிறைய முறை விளக்கமளித்துவிட்டேன். கொஞ்சம் எங்களுக்கு டைம் கொடுங்கள்.. காலஅவகாசம் தர வேண்டும் என பல முறை சொல்லிவிட்டேன். இப்போது நாங்கள் எங்கள் கட்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். நேரம் வரும்போது யாருடன் கூட்டணி.. எத்தனை தொகுதிகள் என எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன். எனவே, இப்போது கூட்டணி குறித்து கேட்க வேண்டாம்

விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நாளும் தேமுதிக தொண்டர்களுக்கு கடினமான காலமாகவே இருக்கிறது. அவர் இல்லாமல் அடுத்தாண்டு தேமுதிக தேர்தலை சந்திக்கிறது. அது மிக பெரிய வருத்தத்தை கொடுத்தாலும் அவருடைய கனவு லட்சியத்தை வென்று எடுப்போம். வெற்றியை அவருக்கு சமர்பிப்போம் என்ற உறுதியோடு பணிகளை செய்து வருகிறோம்.

எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து சொல்ல கொஞ்சம் டைம் வேண்டும். அடுத்த 6 மாதங்கள் முன்பே குறிப்பிட்டது போல கட்சி பணிகளில் கவனம் செலுத்த உள்ளோம். ஜனவரி மாதம் எங்கள் கட்சியின் மாநாடு இருக்கிறது. கட்சி பணிகளை முடித்துவிட்டு மாநாட்டில் மிக தெளிவாக எல்லாமே சொல்வோம்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் தேமுதிக சார்பில் யாராவது கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த மாநாட்டிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை என தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், அழைப்பு வந்த பிறகு அது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.