கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என்றும், நீ யார் எங்களின் வரலாற்றை மறைப்பதற்கு என்றும் மதுரை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் எம்.பி திருச்சி சிவா ஆவேசமாகப் பேசியுள்ளார்.
கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு திருத்த அறிவுறுத்தியுள்ளது. கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா கூறியதாவது:-
ஹரப்பா கலாச்சாரம் தான் இந்தியாவின் மூத்த கலாச்சாரம் என்று சொல்லப்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சியின் முடிவு சிந்துவெளி நாகரிகம் கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிவித்தது. ஆனால், கீழடி ஆராய்ச்சி முடிவுகள் தமிழர்களின் நாகரிகம் கிறிஸ்துவுக்கு 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்திருக்கிறது. ஆனால், அதனை இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. வடக்கே இருப்பவர்கள் சொல்வதெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில். தெற்கே இருப்பவர்கள் சொல்வதெல்லாம் ஆதாரங்களின் அடிப்படையில். அப்படி இருக்கும்போது ஏன் கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கிறீர்கள்?
சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். சரஸ்வதி என்பது ஒரு நதியின் பெயர். அது இருந்ததற்கான சுவடு கிடையாது. புராணங்களில் மட்டுமே சொல்லப்படுகிற சரஸ்வதி நாகரிகத்தை புதுப்பிக்க நினைக்கிறார்கள். இந்தியாவில் உள்ள ஆய்வகங்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள ஆயவகங்களும் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து நிறுவியுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உலகின் மூத்த மொழிகளில் முதன்மையான மொழி தமிழ் மொழி. கீழடி அகழாய்வை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2015ல் தொடங்கினார். 3 ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை அளிக்கப்பட்டது. திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றிய அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் மீது ஒன்றிய பாஜக அரசு பண்பாட்டு படையெடுப்பை நடத்துகிறது. ஒன்றிய அரசு நம் மீது தொடுப்பது பண்பாட்டுப் போர், கருத்தியல் போர், கலாச்சாரப் போர். நாடாளுமன்றம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இந்த முறை நாடாளுமன்ற கூட்டத்தில் நாங்கள் முதலில் எடுக்கப்போவது கீழடி பிரச்சனையை தான். கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்காவிட்டால் நாடாளுமன்றத்தை நடக்க விட மாட்டோம். பாஜக அரசை ஸ்தம்பிக்க செய்வோம். திமுக மட்டுமல்ல எதிர்க்கட்சிகளையும் கிளர்ந்து எழச்செய்வோம். நீ யார் எங்களின் வரலாற்றை மறைப்பதற்கு? இவ்வாறு அவர் பேசினார்.