கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளை மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது திமுக அரசு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ அதிகாரிகள், நேற்று 4 பேரை கைது செய்த நிலையில் கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன் என இப்போதாவது முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கோவையில் ‘அரபுக் கல்லூரி’ என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக நால்வர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் எனும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு கோவை அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புத் தாக்குதலை, வெறும் சிலிண்டர் விபத்து என திமுக அரசு பூசி மொழுக முயன்ற நிலையில், அதற்கு அடுத்து தொடர்ச்சியாக தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தோர் தேசியப் புலனாய்வு அமைப்பால் கோவையிலிருந்து கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் தொடர்ச்சியாக நடந்து வரும் முதியோர்கள் கொலை, மறுபுறம் கோவில் சிலைகள் சேதம். இதற்கிடையில் மனதை அதிர வைக்கும் அளவிற்கு பயங்கரவாத அமைப்பினரின் புழக்கம் என கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளை மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு.
தொழில் வளமும் கல்வி வளமும் நிறைந்து செழித்தோங்க வேண்டிய கோவை, தற்போது சட்டம் ஒழுங்கு சீரழிந்து பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன் என இப்போதாவது முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்த விவகாரத்தில் கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட 4 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் அரபிக் கல்லூரியிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது, அக்கல்லூரியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவு தொடர்பான ஆவணங்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை மூளைச்சலவை செய்து அனுப்புவது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று மீண்டும் கோவை வந்தனர். போத்தனூர் திருமறை நகர் பகுதியைச் சேர்ந்த அகமது அலி, உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த ஜவஹர் சாதிக் ஆகியோரை பிடித்து, காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக மூளைச் சலவை செய்தது தொடர்பாக விசாரித்தனர்.
அகமது அலி, அரபிக் கல்லூரியின் முதல்வராகவும், ஜவஹர் சாதிக், அரபிக் கல்லூரியில் ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர். சில மணி நேர விசாரணைக்கு பின்னர், அஹமது அலி, ஜவஹர் சாதிக், ராஜா அப்துல்லா @ மேக் ராஜா, மற்றும் ஷேக் தாவூத் ஆகிய நான்கு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்தச் சூழலில் தான் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார்.
