“2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும். இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்குமான நீதியும் அதுவே” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கடந்த ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி மெத்தனால் கலந்த விஷச் சாராயம் அருந்திய 229 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 69 பேர் உயிரிழந்தனர். 160 பேர் சிகிச்சை பெற்றதில் சிலர் கண்பார்வை இழந்தனர். விஷச் சாராயம் விற்பனை செய்தது, கடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யப்பட்டு, ஒருவரை தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணமாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. கல்வராயன்மலையில் சிறப்புக் குழு அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி, திமுக அரசை விமர்சித்து வருகிறது அதிமுக. “திருந்தாத திமுக அரசு சொன்ன ஒரு பொய். அதனால் இழந்த உயிர்கள் 67! தமிழ்நாடு ஒருபோதும் மறக்காது! திமுகவை ஒருபோதும் மன்னிக்காது! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நடந்து இன்றோடு ஓராண்டு!” என அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.
மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பதிவில் கூறியுள்ளதாவது:-
கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி! கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு! 67 உயிர்கள் மரணித்தது கள்ளச்சாராயத்தால் மட்டும் அல்ல. தன் நிர்வாகத் திறமின்மையை மறைக்க பச்சைப்பொய் சொன்ன இந்த ஸ்டாலின் அரசின் கள்ளத்தனத்தாலும் தான்! மரக்காணம் மரணங்களின் போதே திருந்தாத திமுக அரசின் அலட்சியம், கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களைக் காவு வாங்கியது!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயப் புழக்கம் இருப்பதை எதிர்க்கட்சி யான அதிமுக சார்பில் எச்சரிக்கை விடுத்தோமே- அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கிடப்பில் போட்டதால் வந்த உயிரிழப்புகள் தானே இவை? CBI விசாரணை வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரை சென்றீர்களே- நீதிக்கே எதிரான ஆட்சி என்பதற்கு, இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்? உச்சநீதிமன்றத்திலும் திமுக அரசு குட்டு வாங்கி, தற்போது CBI விசாரணையில் இந்த வழக்கு உள்ளது. தீர்ப்பு வரும் போது திமுக-வின் கண்ணுக்குட்டி மட்டுமல்ல- கண்ணுக்குட்டியின் எஜமானர்களும் சிக்குவர்!
2026-ல் கள்ளச்சாராய திமுக மாடல் ஆட்சி வீழ்ந்து, அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும். இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்குமான நீதியும் அதுவே! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
