ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து சுமார் 517 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளும் இடையில் போர் துவங்கியுள்ள நிலையில், அந்நாடுகளிலுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக, மத்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் மீட்புத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், ஈரான் சென்று கல்வி பயின்ற மாணவர்கள், அந்நாட்டில் வசித்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமான இந்தியர்கள் நேற்று (ஜூன் 20) இரவு மற்றும் இன்று (ஜூன் 21) காலை, வரை இயக்கப்பட்ட விமானங்கள் மூலம் டெல்லி வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-
“சிறப்பு விமானங்கள் மூலம் ஈரானிலிருந்த இந்தியர்கள் மீட்கப்பட்டு ஜூன் 20 ஆம் தேதி, இரவு 11.30 மணியளவில், புதுடெல்லி வந்தடைந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இதேபோன்று மற்றொரு பதிவில், துர்க்மெனிஸ்தான் நாட்டிலிருந்து இயக்கப்பட்ட மற்றொரு சிறப்பு விமானம் மூலமாக ஈரானிலிருந்து இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டதாகவும்; இதன்மூலம், தற்போது வரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும், அவர் அறிவித்துள்ளார். இத்துடன், இந்தியர்களை அழைத்து வருவதற்கு உதவிய ஈரான் அரசுக்கு. இந்திய அரசு நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானிலிருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வருவதற்காக மட்டும், அந்நாடு தனது வான்வழியைத் திறந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த நடவடிக்கை குறித்து நேற்று பேசிய ஈரான் தூதரகத்தின் துணைத் தலைவர் முகமது ஜவாத் ஹொசைனி, “நாங்கள் இந்தியர்களை எங்கள் சொந்த மக்களாகக் கருதுகிறோம். ஈரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளது, ஆனாலும் இந்தப் பிரச்சினை காரணமாக, இந்திய நாட்டினரின் பாதுகாப்பான பயணத்திற்காக ஈரான் வான்வெளியை திறக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். முதல் விமானம் இன்றிரவு புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும், சனிக்கிழமை மேலும் இரண்டு விமானங்கள் தரையிறங்கும்” என்று தெரிவித்தார்.
