பகல் வேஷம் போடக் கூடியவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளை, சமூகத்தை பிளவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் உள்ளவர்களால் பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும், பக்தியின் பெயரால் பகல் வேஷம் போடக் கூடியவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிய அவர் சேகர் பாபு, எப்போது தூங்குகிறார்? எப்போது சாப்பிடுகிறார்? என்று யாருக்கும் புரியவில்லை. முதலமைச்சராக இருக்கக்கூடிய எனக்கே புரியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு தனக்கு ஒப்படைக்கப்பட்டு இருக்கக்கூடிய பணிகளில் சிறந்து விளங்குகிறார் சேகர்பாபு. நான் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் தான் அதிகம் கலந்து கொண்டு உள்ளேன். கடந்த 4 வருடங்களில் 1800 திருமணங்கள் நடந்து உள்ளது. எந்த விவரத்தைக் கேட்டாலும் ஆயிரத்தை தாண்டி தான் சொல்கிறார் சேகர் பாபு. 2376 திருமணங்களை நடத்தி வைத்து குடும்பங்களுக்கு விளக்கேற்றியவர் தான் சேகர்பாபு. அடியாருக்கு அடியார் போல் உழைத்துக் கொண்டிருக்கிறார் சேகர்பாபு. அதனால்தான் பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக தொடர்ந்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சியில் 3176 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. புகழ் மகுடத்தில் வைரமாக இருக்கக்கூடிய சாதனை இது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் 29 பேர் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 12 பெண் ஓதுவார்கள் உட்பட 46 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடைகள், குடியிருப்புகள், ஓய்வூதியம், உடல் பரிசோதனை திட்டம் என ஏராளமான திட்டங்களை இந்து சமய அறநிலைத்துறை பணியாளர்களுக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பு ஊதியத்தில் பணி செய்த 1342 பேருக்கு பணி வரன்முறை வழங்கப்பட்டுள்ளது. எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளை வெறுப்பையும் சமூகத்தை பிளவுபடுத்தக்கூடிய எண்ணங்களை கொண்டவர்களால் இதைப் பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை. பக்தியின் பெயரால் பகல் வேஷம் போடக் கூடியவர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உண்மையான ஆன்மீக பக்தர்கள் நம்முடைய ஆட்சியை பாராட்டுகிறார்கள். என்னை பற்றி மீம்ஸ் போடுகிறார்கள். விமர்சிக்கிறார்கள். நேற்று ஒரு வாரப்பத்திரிகையில் நான் காவடி எடுப்பது போன்றும், அமைச்சர்கள் அலகு குத்துவது போலவும், கார்ட்டூன் போட்டிருந்தார். அது பல ஆண்டுகால வன்மத்தில் வடிகால் தான் அந்த கார்ட்டூன். இன்னும் பல விமர்சனங்களை செய்யுங்கள். நான் கவலைப்பட மாட்டேன். என் கடன் பணி செய்து கிடப்பதே. விமர்சனங்களை பற்றி கவலைப்படவில்லை. அதனை ஊக்கமாக எடுத்துக் கொள்கிறேன். என்னை கேலி செய்யுங்கள். கிண்டல் செய்யுங்கள். கொச்சைப் படுத்துங்கள். வெறுப்பை பரப்புங்கள். அதை பற்றி கவலை படவில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற உணர்வோடு மணமக்களை வாழ்த்துகிறேன். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் அதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள். இவ்வாறு அவர் பேசினார்.