எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும்.. போலீஸ் உளவியல் இதுதான்: திருமாவளவன்!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் போலீசார் அடக்குமுறைக்கான காரணம்.. அங்கே என்ன நடக்கிறது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் என்பவரைத் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை என அழைத்துச் சென்ற போலீசார் கொடூரமாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ் தாக்கியதிலேயே அஜித் குமார் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு தொடர்புடைய காவலர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்துள்ளது. அது ஆறுதலைத் தருகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நீடிக்கிறது. திமுக ஆட்சியில் மட்டுமில்லை.. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்.. தமிழ்நாடு மட்டுமின்றி.. இந்தியா முழுக்கவே கஸ்டடி மரணங்கள் தொடர்கிறது. சாதாரண வழக்குகளிலும் கூட புலன் விசாரணை என்ற பெயரில் எளிய மக்களும் கொடூரமான முறையில் தாக்கப்படுகிறார்கள். படுகொலை செய்யப்படுகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நீடிக்கிறது.

இதன் காரணமாகவே சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் காவலர்களைச் சட்டப்பூர்வமான ரவுடிகள் என விமர்சித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டிலேயே காவலர்கள் பற்றி நீதிபதிகள் சொன்ன கருத்துதான் இது. போலீசார் பொதுவாக ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருந்தாலும் இந்தக் கட்சி, அந்தக் கட்சி என இருக்க மாட்டார்கள். எளிய மக்களை நசுங்கி சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதை ஒரு நடைமுறையாகக் கையாண்டு வருகிறார்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்துவது போலீசாருக்கு இருக்கும் மிக முக்கியமான பொறுப்பு. எளிய மக்களே இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே இதில் கசப்பான உண்மை!

இப்போது நடந்த சம்பவம் என்பது ஒரு சிறிய திருட்டு தொடர்பானதுதான். அதாவது சாமி கும்பிடப் போன குடும்பத்தினர் திரும்ப வந்தபோது நகையைக் காணவில்லை என்பதே புகார். அங்கு இவர் செக்யூரிட்டியாக இருந்திருக்கிறார். இவ்வளவு தான் விஷயம்.. இதற்காக அவர் உடலில் ஒரு அங்குலம் கூட மிச்சம் வைக்காமல் தாக்கியுள்ளனர். இன்று உயர் நீதிமன்றமே அதைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த உளவியலைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒருவன் இறந்துவிடுவான் என்பது தெரிந்தும் எப்படி 10, 20 பேர் சேர்ந்து ஒருவனைக் கண்மூடித்தனமாக மூர்க்கத்தனமாகத் தாக்குகிறார்கள். 9 சவரன் நகைக்காக ஒரு உயிரையே எடுக்கிறார்கள்.

அதேநேரம் இது ஆளும்கட்சியால் நடக்கிறது எனச் சொல்ல முடியாது. எந்தக் கட்சி இருந்தாலும், குடியரசுத் தலைவர் ஆட்சியே இருந்தாலும் இதுபோலத் தான் நடக்கிறது. போலீசாருக்கு பொதுவாகவே ஒரு உளவியல் இருக்கிறது. மக்களுக்கு எதிரானதாகவே அந்த உளவியல் இருக்கிறது. அந்தக் கோணத்தில் தான் நாம் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டி இருக்கிறது. இந்த விஷயத்தில் திமுக அமைச்சர் தலையிட்டார் அல்லது திமுக மாசெ தலையிட்டார் என சொல்ல முடியாது. இது போலீசாருக்கே இருக்கும் உளவியல். இவ்வாறு அவர் கூறினார்.