அஜித்குமாருக்கு நீதி கேட்டு தவெக அறிவித்த ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்!

காவல் விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலில் பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில், கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை(ஜூலை 3) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ள சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறுவதால் தவெக போராட்டம் தேதி மற்றும் இடம் மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் விஜய்யின் உத்தரவின்பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடம், அன்றைய தேதியில் வேறு காரணத்திற்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி காவல் துறையால் அளிக்கப்பட்ட மாற்று இடத்தில் (சென்னை, சிவானந்தா சாலையில்) 06.07.2025 ஞாயிறு அன்று காலை 10 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.