திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுவதாக விசிக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், காங்கிரஸ் குறித்த விசிக நிர்வாகியின் கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறினாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மூலம் திமுக செய்து வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பிறகு , “2011-ம் ஆண்டு போல் விசிகவும், பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும்” என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
செல்வப்பெருந்தகையின் கருத்தை கடுமையாக விமர்சித்து தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் வலிமையாகவா இருக்கிறது. எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கூறுகிறோம். நான் கூட்டணி கட்சியை குறைத்து மதிப்பிடவில்லை. அதேநேரம், காங்கிரஸின் வலிமை குறித்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தினால் உண்மை தெரியவரும்.
தமிழகத்தில் காங்கிரஸுக்கு என்ன இருக்கிறது? அகில இந்திய அளவில் ராகுல்காந்தி என்னும் தலைவர் சிறப்பாக செயல்படுகிறார். அதன் தொடர்ச்சியாகவே காங்கிரஸை பார்க்க வேண்டியிருக்கிறது. விசிகவுக்கு செல்வப்பெருந்தகை தலைவர் இல்லை. இன்று அவர் ஒரு கட்சியில் இருப்பார், நாளை ஒரு கட்சிக்கு செல்வார். இதுதான் அவருடைய கடந்த கால வரலாறு. விசிக குறித்து பேச அவருக்கு தார்மீக உரிமை இல்லை. பாஜக, பாமகவோடு சேர மாட்டோம் என விசிக தலைவர் தெளிவாக கூறிய நிலையில், பாமகவோடு சேருங்கள் என சொல்வது அவர் வேலையல்ல. பாஜகவும், காங்கிரஸும் சேர வேண்டும் என நாங்கள் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்வாரா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
