தவெக நடத்த உள்ள போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி!

திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக நடத்த உள்ள போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் தனிப்படை போலீசாரால் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்றக் கோரியும் தவெக தரப்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய நாளில் அந்த இடம் வேறு காரணத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால், புதன்கிழமை (ஜூலை 3) நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கோரிய நிலையில், இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரை அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு அளித்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில், நீதிபதி வேல்முருகன் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (ஜூலை 7) விசாரணைக்கு வந்த நிலையில், தவெக போராட்டத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, காவல்துறையும் தவெகவினரின் போராட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை சிவானந்தா சாலையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.