இத்தனை விபத்துகள் நடந்த போதும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதல் உட்பட இத்தனை விபத்துகள் நடந்த போதும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

கடலூரில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடாததே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம், பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை 7.06 மணிக்கு மூடிவிட்டார். ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டதால், கேட்டை பங்கஜ் சர்மா திறந்ததாகவும் கூறி வருகிறது. ஆனால் ரயில் விபத்தில் சிக்கிய பள்ளி வேனில் இருந்த மாணவர் விஸ்வேஷ், ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது. விபத்துக்கு பின்னரும் ரயில்வே கேட் கீப்பர் எழுந்து வரவில்லை. அவர் அறையில் இருந்தார் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதேபோல் பங்கஜ் சர்மா ஏற்கனவே இப்படி 4, 5 முறை செய்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

கடலூரில் பள்ளி வாகனம் மீது இரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இத்துயர்மிகு வேளையில், அக்குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளும் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

இந்த நாட்டில் மொத்தமுள்ள 68,584 கி.மீ தூரம் ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே ‘கவாச்’ பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், ஒன்றிய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

“கவாச்” (Kavach) என்பது இந்திய ரயில்வே துறையின் “Train Collision Avoidance System” ஆகும். இது ஒரு உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பு. இது ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் மோதல்களையும், தவறான சிக்னல்களையும் தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யும். தொடர்ந்து, சிக்னல் பிழைகள் மற்றும் மனித தவறுகளையும் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.