பாஜகவைவிட மிகப்பெரிய துரோகிகள் அதிமுகவினர்: கனிமொழி!

தமிழகத்திற்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகிகள் அதிமுகவினர் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

பாஜகவோடு இனி எந்தகாலத்திலுமே கூட்டணி சேர மாட்டோம். தமிழ்நாட்டிற்கு பாஜகவினர் துரோகம் செய்கிறார்கள் என்றெல்லாம் அதிமுகவினர் தொடர்ந்து கூறிவிட்டு அவர்களுடன் கூட்டணி இல்லை என்று கூறினார்கள். இப்போது திடீரென எல்லாவற்றையுமே மறந்துவிட்டு கூட்டணி தேர்தல் வியூகம் அமைக்கிறோம் என்று கூறுகின்றனர். அதுவும் தமிழ்நாட்டுக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களை விட மிகப்பெரிய துரோகிகளாக அதிமுகவினர் பாஜகவுடன் போய் சேர்ந்துள்ளனர். இதனால், அதிமுக பாஜக குறித்து வீடு வீடாகப் போய் அடையாளம் காட்டக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

அதேநேரத்தில் தொடர்ந்து தமிழகத்தின் மீது இத்தனை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. நம் தமிழ் அடையாளங்களை மாற்ற வேண்டும். மொழியை மாற்ற வேண்டும் என்ற தாக்குதல்களை ஒன்றிய அரசாங்கம் நடத்துகின்றன. ஏன் 39 பேர் பாராளுமன்றத்தில் நின்னு தமிழ்நாட்டுக்காக சண்டை போடுறாங்க என்ற காரணத்திற்காக தொகுதி சீரமைப்பு என்று சொல்லி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை குறைக்க நினைக்கக்கூடிய ஒரு பாஜக அரசு ஆட்சி நடக்கிறது. இன்று பாராளுமன்றத்தில் 39 உறுப்பினர்களாக இருக்கக்கூடிய எண்ணிக்கை நாளை 20 பேர்களாக குறைந்தால் அவ்வளவு பெரிய மன்றத்தில் நம்முடைய பேச்சு எடுபடாது. எனவே, அந்த நிலைக்கு நாம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தொகுதி மறுசீரமைப்பை தொடர்ந்து நம் முதல்வர் ஸ்டாலின் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதனை செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அதனை செய்ய வேண்டும் என்றால், நமக்காக போராட வேண்டும் என்றால் ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது உங்களுக்குப் புரிய வேண்டும். நம் உரிமைக்காக எவற்றுக்கெல்லாம் ஒன்றிய அரசாங்கத்திடம் குரல் கொடுக்க வேண்டும் என்பது குறித்து நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

புதிதாக அரசியலுக்குள் நுழைந்துவிட்டு ஜெயித்துவிடுவேன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், எது ஒன்றிய அரசு, எது மாநில அரசு என்ற வித்தியாசம் கூட தெரிவதில்லை. ஆட்சி மாற்றம் டெல்லியில் வரும்போது செய்து தருகிறோம் என்று கூறினோம். அரசு குறித்து வித்தியாசம் தெரியாமல் பேசக்கூடியவர்கள் எல்லாம் இன்று தேர்தலில் நிற்பதற்கு, வாக்கு கேட்பதற்காக வந்து கொண்டிருக்கின்றனர். இதனைப் பொதுமக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். என்ன அழுத்தம் கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்த இடத்திலும் தடை இல்லாமல் கொண்டு சென்று, அதே நேரத்தில் நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக் கூடிய ஆட்சி திமுக ஆட்சி மட்டும்தான் என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த வாய்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.