ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக் கோனின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் இன்று(ஜூலை 11) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக் கோன், தாய் நிலத்தின் உரிமை காக்க, அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர்.
வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக் கோன் பிறந்த நாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
