அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக தனக்கு பலமாக உள்ள கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் நான்கு முனை சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தரப்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை 524 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் பல கோரிக்கைகளை திமுக நிறைவேற்றவில்லை. 75 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது திமுக. ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்கு பின் அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாக மகளிருக்கு ரூ.1,000 கொடுத்தார்கள். அதேபோல் திமுக அரசு தேர்தல் வரை மட்டுமே மகளிருக்கு உரிமைத் தொகையை தருவார்கள். திமுக கொடுக்கும் ரூ.1,000க்கு ஆசைப்பட்டு நாங்கள் கொடுக்கவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தபின் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்படும்.
திமுக குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புக்கு வர முடியும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று இருக்கிறார்கள். பின்னால் இன்பநிதி என்று ஒருவர் இருக்கிறார். வாரிசு அரசியல் என்ன பட்டாவா போட்டு வைத்திருக்கிறது. இது என்ன மன்னராட்சியா? குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர வேண்டுமா? குடும்ப ஆட்சிக்கு, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். ஏற்கனவே மன்னர் ஆட்சி இந்தியாவில் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் திமுக மீண்டும் மன்னராட்சியை கொண்டு முயற்சிக்கிறது. அதற்கு மக்கள் சரியான பதிலடியை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
