தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்ற போதிலும் இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேநேரம் தேர்தலில் இந்தக் கூட்டணி வென்றால் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சியே அமையும் என்று சொல்லப்படுவதால் அது விவாதமாக மாறியுள்ளது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு உள் துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா முக்கியமான பதிலை அளித்துள்ளார்.
பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கிறது. ஆனால், பீகார் தேர்தலை விடவும் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் தான் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இங்கு கிட்டதட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தலை மனதில் வைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டன. இதனால் தமிழகத்தில் இப்போதே தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாடு அரசியல் இங்கு அதிமுக பாஜக கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அதேநேரம் கூட்டணி தொடர்பான அறிவிக்கும்போது மூத்த தலைவரான அமித் ஷா கூட்டணி ஆட்சி என்பது போலக் கூறியிருந்தார். தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததே இல்லை. 2006ல் திமுக தனிப்பெரும்பான்மையைப் பெறாத போதிலும் கூட காங்கிரஸ் வெளியில் இருந்து தான் ஆதரவு கொடுத்தது. 5 ஆண்டுகள் திமுக ஆட்சியே நடந்தது.
இந்தச் சூழலில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறியது விவாதம் ஆனது. அதிமுக தலைவர்கள் கூட்டணி ஆட்சி இல்லை என்று சொன்னாலும் இது குறித்து தமிழ்நாடு அரசியலில் விவாதமாக மாறியுள்ளது. இதற்கிடையே பிரபல ஆங்கிலச் செய்தித்தாளான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டியளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாகச் சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மொழிப் பிரச்சனை மொழிப் பிரச்சனை குறித்து கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எங்களைப் பொறுத்தவரை எந்தவிதமான சண்டையும் இல்லை. எங்களுடைய கொள்கை உறுதியானது.. இந்தியா இந்திய மொழிகளில் தான் இயங்க வேண்டும். இந்த நாடு இன்னும் அயல்நாட்டு மொழிகளில் தான் இயங்க வேண்டும் என்று நினைப்போரிடம் தான் சிக்கல் இருக்கிறது. சீனாவிடம் இருந்து நாம் இதை கற்றுக் கொள்ளலாம். ரஷ்யாவிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஜப்பான் கூட.. ஜெர்மனி, பிரான்ஸ் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்! நாங்கள் அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்கிறோம். தென்னிந்தியா அதன் சொந்த மொழிகளில் இயங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இரு தெலுங்கு மாநிலங்கள் தெலுங்கில் இயங்க வேண்டும். தமிழ்நாடு தமிழில் செயல்பட வேண்டும். கேரளா மலையாளத்தில் செயல்பட வேண்டும். எங்கள் விருப்பம் அனைத்து இந்திய மொழிகளின் மீதும் உள்ளது. இதன் காரணமாகவே நாங்கள் சிஏபிஎஃப் கான்ஸ்டபிள் தேர்வை 13 மொழிகளில் நடத்தினோம். ஸ்டாலின் தமிழ்நாட்டில் என்ன செய்திருக்கிறார் என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, “நாங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்வோம். நான் மக்களின் மனநிலையைப் பற்றிப் பேசுகிறேன். தமிழ்நாடு மக்கள் ஊழல், மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு, குடும்ப அரியலால் வெறுத்துப் போயிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார். அடுத்து தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக வெற்றி பெற்றால் அடுத்து அமையும் அரசில் பாஜக இடம்பெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஒரே வார்த்தையில் ஆம் என பதிலளித்தார்.
