தமிழகத்தில் உள்ள எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தவெக சென்னை மண்டல வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆதித்ய சோழன் தாக்கல் செய்த மனுவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தமிழகத்தின் முன்னாள் இந்நாள் எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்தேன். மேலும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என கோரியிருந்தேன். எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தேன். ஆனாலும், நான் கேட்ட தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை . மக்கள் நலன் கருதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல். எனவே எனது கோரிக்கை தொடர்பான விவரங்களை வழங்க மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
