வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு, தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழாவை சுட்டிக்காட்டி நடிகர் விஜயை விமர்சித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு, தமிழக தேர்தல் அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக தேர்தல் அதிகாரி, மாநில டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு அவரது கட்சி தயாராகி வருகிறது. தற்போது விஜய் தனது கடைசி படத்தில் நடிக்கிறார். விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் பிரமாண்டமாக 2 பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக நடிகர் விஜய் கடந்த 2023ம் ஆண்டு முதல் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 3 கட்டங்களாக மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் கல்வி விருதுகளை வழங்கி பாராட்டினார். அப்போது விஜயுடன் மாணவ-மாணவிகள் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர்.

இதனை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றி அவர், ‛‛இரண்டு கிராம் தங்கத்திற்காக ஒரு கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வைக்கிறார்கள். மாணவிகளின் தோள் மீது கைபோட அனுமதிக்கிறார்கள். இதுதான் தமிழர்களின் மரபா? இதற்கெல்லாம் பெற்றோர் எப்படி சம்மதிக்கிறார்கள். ஒரு கூத்தாடி முன் பிள்ளைகளை நிற்க வைக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார். விஜயின் பெயரை கூறாமல் வேல்முருகன் அவரை விமர்சனம் செய்திருந்தார். வேல்முருகனின் இந்த விமர்சனத்துக்கு கடும் தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் வேல்முருகனை பலரும் விமர்சனம் செய்தனர்.

இதுதொடர்பாக தவெக சார்பில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மீது விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை நேற்று செய்யப்பட்டது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் மாநில டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது வேல்முருகனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. வேல்முருகன் தற்போது கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இவர் திமுக கூட்டணி சார்பில் அந்த தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதும் அவர் திமுக கூட்டணியில் தொடரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.