திமுகவை எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் அந்த நோக்கம் நிறைவேறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் ஆடிமாவாசையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். அவர்கள் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தவெக நாதகவுக்கு தொடர்ந்து ஏன் அழைப்பு விடுக்கிறார். அவர்கள் தை நிராகரித்துள்ளனர் என கேட்கிறீர்கள். அதிமுக பிரதான கட்சி திமுகவை எதிர்க்கிறது. தவெக, நாதக, பாமக, அன்புமணி, ராமதாஸ் திமுகவை எதிர்க்கிறார்கள். எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் அந்த நோக்கம் நிறைவேறும். திமுகவில் இருக்கும் கம்யூனிஸ்ட், திருமாவளவன் ஆட்சிக்கு மாறான கருத்துக்களை சொல்லுகின்றனர். 20 சதவீதம் ஆதரவு, 80 சதவீதம் எதிர்ப்பு நிலையில் உள்ளனர். திமுகவை எதிர்க்கும் கட்சிகளில் 50 ஆண்டு கால வரலாறு, கொள்கை கொண்ட மக்கள் நம்பிக்கை கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். 80 சதவீத திமுக எதிர்ப்பு பிரிந்து நிற்பதால் சிதைந்து விடக் கூடாது. எனவே அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு விடியல் கிடைக்க வேண்டும் என்ற மக்கள் விரும்பும் நோக்கத்தின் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார். எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் நோக்கம் நிறைவேறும். எதிர்க்கும் கட்சியில் நம்பிக்கை பெற்ற தலைவர் எடப்பாடி. பிரிந்து நின்றால் திமுகவை வீழ்த்தும் நோக்கம் நிறைவேறாது.
அன்வர்ராஜா விலகலால் அதிமுகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தனிப்பட்ட ஒருவர் எடுக்கும் முடிவு கட்சியை பாதிக்காது. அதை பொது விவாதத்திற்கு கொண்டு வர வேண்டிய தேவை இல்லை. நாங்கள் புலி வேட்டைக்கு செல்கிறோம் இடையில் எலி அணில் இடையில் பாடும், ஓடும், செல்லும். அதையெல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. ஓபிஎஸ் இணைப்பு குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ் இணைப்பு காலம் கடந்து விட்டது.
பல கட்சிகள் அதிமுகவுடன் இணைய பாஜக தடையாக உள்ளதா குறித்த கேள்விக்கு, நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம். மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து முறையான விசாரணை நடக்க வேண்டும். ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு இருப்பதால் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக ஆட்சியில் அரசு கஜானாவில் இருந்த பணம் மக்களுடைய பணம். அது பாதுகாப்பாக இருந்தது. ஆனால் திமுகவின் ஆட்சியில் அரசு கஜானா பணம் தங்களின் பணம் என சட்டைப்பையில் சர்வ சாதாரணமாக எடுத்து வைக்கப்படுகிறது. 500 கோடி ஆயிரம் கோடி என்கிறார்கள். குற்ற உணர்வே இல்லாமல் மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதை கலையாக வைத்திருப்பதை பார்க்கும்போது தான் வேதனையாக இருக்கிறது.
கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என இப்போது சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள். கூட்டிக் கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும். எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது. வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதை போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார். நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய விசாரணை அதிமுகவுக்கு தடையாக இருக்குமா என்ற கேள்விக்கு இடமில்லை. ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் எல்லாம் சரியாகும். அதிமுகவிற்கு நல்லதே நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
