தமிழகத்தில் போலீஸுக்கே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ராஜாராமன் (54) என்பவர் பணியாற்றி வந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் வார விடுமுறை நாட்களில் நண்பர்களைச் சந்திப்பது வழக்கமாம். இந்நிலையில், ராஜாராமன் கடந்த 18 ஆம் தேதி இரவு 8 மணியளவில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் ‘வீடியோ கேம்’ விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, ராஜாராமனுடன், அவரது நண்பர்களான ராக்கி, அய்யப்பன் ஆகியோரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், வீடியோ கேம் விளையாடி விட்டு ராஜாராமன் கிளம்பத் தயாரகியுள்ளார். அப்போது, ராஜாராமனுடன் ராக்கி, அய்யப்பன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கடுமையாக அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டதில் ராஜாராமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, ராஜாராமன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, இவ்வழக்கை எழும்பூர் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து ராஜாராமனின் நண்பர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில்,காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

சென்னை எழும்பூரில் கடந்த ஜூலை 18 அன்று தாக்குதலுக்கு ஆளாகிய ஆயுதப்படை எஸ்.ஐ. ராஜராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் எஸ்.ஐ. ராஜராஜன் அவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புனைவு FIR-களுக்கு பெயர்போன திமுக அரசு, அஜித்குமார் வழக்கு போலவே இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை. ஆனால், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது.

காவல்துறையினர் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல்துறை சீர்கேடுகள் குறித்து போதுவெளியிலேயே தெரிவிப்பது என தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றைத் தான்- காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற முதல்வராக இருக்கிறார் பொம்மை முதல்வர் ஸ்டாலின்!

எஸ்.ஐ. ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.