தமிழகத்தைப் பற்றி ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருகையையொட்டி நெல்லை மகாராஜா நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், மூத்த தலைவர்கள் எச் ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். முன்னதாக பிரதமரின் வருகை குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பல லட்சம் கோடிக்கு அதிகமான திட்டங்களை நரேந்திர மோடி தந்துள்ளார். 140 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ரயில் போக்குவரத்து, வந்தே பாரத் ரயில் போன்ற நிறைய திட்டங்களை தந்துள்ளார். திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக செல்வப்பெருந்தகை இதை சொல்லி இருக்கிறார். நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவது புதிதல்ல, ஏற்கனவே பலமுறை இங்கு வந்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு கூட ராஜேந்திர சோழனின் புகழை உலகெங்கும் பரப்பியதற்கு மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். உருட்டும் திருட்டும் உங்கள் பார்வை என்ன கேட்டதற்கு, அது திமுகவின் கொள்கையாக இருக்கிறது. தமிழக முதல்வர் முதலில் தமிழகத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும். பிகாரைப் பற்றி கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. அது தேர்தல் ஆணையத்தின் முடிவு. முதல்வர் நெருப்பாக இருக்கலாம். கூட்டணி குறித்து எதிர்க்கட்சிகளிடம் ஒரு முறையாவது கேளுங்கள் எங்களிடம் அடிக்கடி கேட்காதீர்கள். ஓபிஎஸ் பிரதமரை சந்திப்பது குறித்து எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.