35 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கும் நான் முதல்வர் பதவிக்கு தகுதியில்லாத ஆளா?: திருமாவளவன்!

நேற்று வந்தவர்கள் எல்லாம், என்னை முதல்வராக்குங்கள் என்று தமிழக மக்களிடம் கேட்கிறார்கள். ஆனால், கடந்த 35 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கும் நான் முதல்வர் பதவிக்கு தகுதியில்லாத ஆளா? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணிப்பேட்டையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-

சாதனத்தை எதிர்க்கும் சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம். அண்ணன் எடப்பாடிக்கு ஆத்திரம் பொங்குகிறது.. உன்னைய யார் கூப்பிட்ட? நான் கூப்பிட்டேனா? என்று கேட்கிறார். நீங்கள் அழைத்தீர்கள் என்று நான் ஒரு நாளும் சொல்லவே இல்லை. ஆனால், உங்கள் சார்பில் யாரோ ஒருவர் பேசினார்கள் என்றுதான் நான் சொல்லியிருந்தேன். யார் பேசினார்கள் என்று வெளிப்படையாகவா சொல்ல முடியும்? துணை முதல்வர் பதவியை கொடுப்போம் என்று எப்போது சொன்னோம் என்று கேட்கிறார். நீங்கள் சொன்னதாக நான் சொல்லவே இல்லையே. என்னிடம் பலர் கேட்கிறார்கள் ஏன் துணை முதல்வர் பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என. எனக்கு கோபம் வராதா? ஏன் நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா?

யார் யாரோ கிளம்புகிறார்கள் நானும் ரௌடி நானும் ரௌடி என்று கூறிக் கொண்டு.. கடந்த 35 ஆண்டுகளாக நான் பொது வாழ்க்கையில் இருக்கிறேன். ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நான் அரசியல் வாழ்க்கையில் இருக்கிறேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியுடன் அரசியல் பேசி இருக்கிறேன். ஜெயலலிதா உடன் அரசியலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலினோடு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இவ்வளவும் செய்திருக்கும் என்னை, ஏன் துணை முதல்வர் என்று சொல்கிறீர்கள்? முதல்வருக்கு எனக்கு என்ன தகுதி இல்லை? முதல்வர் பதவியா? துணை முதல்வர் பதவியா என்பது போட்டியில்லை. இரண்டில் யார் பெரிய அதிகாரம் படைத்தவர்கள்? என்பது இந்த விவாதம் அல்ல. ஆனால் இப்படி ஆசை காட்டினால் நான் வந்து விடுவேன் என்று சிலர் நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.