நெல்லையில் கவின் ஆணவக் கொலை வழக்கில் ஏற்கனவே கொலையாளி சுர்ஜித் கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், அவர்களின் பெற்றோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் அவர்களைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கவின் பெற்றோர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் சுர்ஜித்தின் தந்தையான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் என்பவர் கடந்த ஜூலை 27ம் தேதி ஆணவ படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் கவின் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பட்டப்பகலில் கவின் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே கொலையாளி சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். தன் அக்காவிடம் பழகக் கூடாது என்று பலமுறை கூறியும், தொடர்ந்து பேசி வந்ததால் கவினை வெட்டி கொலை செய்துள்ளார். மருத்துவமனை வெளியே மரத்தடியில் வைத்து வெட்டி கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கண்டித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதில் கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோர் இருவருமே போலீஸ் உதவி ஆய்வாளர்களாக உள்ளனர். அவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதாகவும் அவர்களைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து கவின் பெற்றோர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தம்பதி இருவருமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் தான் சுர்ஜித்தின் தந்தையான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கவின் பெற்றோரின் முக்கிய கோரிக்கையாக இது இருந்த நிலையில், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் என 3 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித் கொலையான நாளிலேயே போலீசில் சரணடைந்தார். அவர்களின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் எனக் கவின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், உரிய ஆதாரம் இல்லாததால் கைது செய்வதில் தாமதம் எனக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் தான் சுர்ஜித்தின் தந்தை சரவணன் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தை சரவணன் நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவ பரிசோதனையைத் தொடர்ந்து அவர், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கிறார். அடுத்த கட்டமாக சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியும் கைது செய்யப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இந்த சம்பவத்தில் கொலையாளி சுர்ஜித் மீது இன்று குண்டாஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும். சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
