செந்தில் பாலாஜி வழக்கை எப்போது முடிப்பீர்கள்?: உச்சநீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறிய பணமோசடி வழக்கை எவ்வாறு நடத்த போகிறீர்கள்? எப்போது முடிப்பீர்கள்? என்ற தெளிவான திட்டத்தை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். செந்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2011 – 15 வரையிலான அதிமுக, ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணம் வாங்கி பணி ஆணைகளை வழங்கிய புகாரில் தமிழக போலீஸ், 2018ல் மூன்று வழக்குகளை பதிவு செய்தது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் 14ல் அமலாக்கத்துறை கைது செய்தது. அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. 15 மாதம் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் அமைச்சரானார்.

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபப்ட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால், அவர் மீதான வழக்கு விசாரணை எப்படி நியாயமாக நடக்கும். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் ஜாமீன் ரத்து செய்ய உத்தரவிடுவோம் என்று கூறியது. இதையடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் 27ல் ராஜினாமா செய்தார்.

செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை தொடர்பாக ஒய். பாலாஜி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்சி அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் முறையாக விசாரிக்கப்படவில்லை. வழக்கை இழுத்தடிக்க, 2,300 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்து வழக்கை முடிப்பது என்பது இயலாத காரியம்” என்று கூறினார்.

இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அதன்பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள், பாதிக்கப்பட்ட நபர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்க முயல்வது நன்றாகவே தெரிகிறது. வழக்கை இழுத்தடிக்க தமிழக அரசு முயல்கிறதா?. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தவிர, இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், அமைச்சரின் பரிந்துரையின் பேரில் பணியாற்றிய அதிகாரிகள், பணம் பெற்று பணி ஆணை வழங்கியோர் என அனைவரது விபரங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

அதன்பிறகு வழக்கு விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்தது. இதையடுத்து நேற்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த்,ஜாய் மால்யா பக்சி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிராக ஒய் பாலாஜி என்பவர் தொடர்ந்த மனு, வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று வித்யகுமார் தாக்கல் செய்த மனு, கடந்த 2022 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில பத்திகளை நீக்க வேண்டும் எனக்கூறி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஒய் பாலாஜி, தரப்பில் மூத்த வழக்கறிஞர் சங்கர நாராயணன் ஆஜரானார். அவர், ‛‛ஒவ்வொரு வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரித்தால் தீர்வு கிடைக்க காலதாமதம் ஏற்படும். இதனால் செந்தில் பாலாஜி மீதான பிரதான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை தனியாக விசாரிக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த வேளையில் நீதிபதிகள், ‛‛இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 900க்கும் மேற்பட்டதாக உள்ளது. மொத்தமாக 2,000 குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தனித்தனியாக விசாரிக்கும்போது காலவிரயம் ஏற்படும்” என்றனர். அதற்கு வழக்கறிஞர் சங்கர நாராயணன், ‛‛பணம் கொடுத்தவர்களில் பலர் ஏழைகள். நிலம், நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும் பணம் கொடுத்துள்ளனர். இதனால் செந்தில்பாலாஜியின் சகோதரர்கள், அதிகாரிகள் தொடர்பான வழக்கை தனியாக விசாரித்தால் விரைவாக தீர்வு கிடைக்கும்” என்றனர்.

இதை கேட்ட நீதிபதிகள், ‛‛பிரதான வழக்கில் தொடர்புடைய 900 பேரின் விவரங்களை தங்களுக்கு அளிக்க வேண்டும். பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் யார்? எந்த பொறுப்பில் உள்ளனர்? என்பது பற்றி நீதிமன்றத்திடம் வழங்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து மனுதாரர் தரப்பில், ‛‛சிறப்பு அரசு வழக்கறிஞரை நீதிமன்றம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடக்கும்போது தீர்வு விரைவாக கிடைக்கும்” என்று கூறப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் தரப்பில், ‛‛குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒரு அரசியல்வாதி. பொதுமக்களின் ஆதரவு பெற்ற அரசியல்வாதியாக இருக்கிறார். அவர் அவ்வாறு இருப்பதில் தவறும் இல்லை. அமைச்சராக இருந்த ஒருவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும்போது அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மூலம் வழக்கை எதிர்கொள்ளும்போது நீதியை நிலைநாட்ட முடியாது என்ற பொதுக்கருத்து உள்ளது என்பது மட்டுமே எதிர்தரப்பினரின் கவலையாக உள்ளது. இதனால் முதலில் எத்தனை பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது? பணம் எப்படி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றிய விவரங்களை வழங்க வேண்டும். வேலைக்கு பணம் பெற்ற வழக்கை எவ்வாறு நடத்தப்போகிறீர்கள்? என்பது பற்றிய தெளிவான திட்டத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த வழக்கை எவ்வளவு காலத்தில் விசாரித்து முடிக்கப்படும் என்பது பற்றியும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்க வேண்டும்” என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.