தமிழ்நாட்டையே உலுக்கிய சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் தந்தை, மகன் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் ஆகியோரும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். மூன்று பேரும் நேற்று இரவு மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி, மணிகண்டன் இருவரும் சேர்ந்து தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். போலீஸ் வந்ததை பார்த்த மணிகண்டன் தோட்டத்தில் சென்று பதுங்கி கொண்டார்.
காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார் சண்முகவேல். மேலும் மூர்த்தி, தங்கபாண்டி புகைப்படங்களை எடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இருவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது மறைந்திருந்த மணிகண்டன் உதவி ஆய்வாளரை வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகவேல் தப்பிக்க ஓடியுள்ளார். போதையில் இருந்த 3 பேரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்தனர்.
உடன் இருந்த ஓட்டுனரையும் துரத்திச் சென்றுள்ளனர். அவர் ஓடி தப்பி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியே கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சண்முகவேலை கொலை செய்து விட்டு தப்பியோடிய மூர்த்தி, தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டனை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், சண்முகவேலை வெட்டி கொன்ற மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாலை சரண் அடைந்தனர். அதே வேளையில் மணிகண்டன் சரணடையவில்லை. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் உடற்கூறாய்வு முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் சண்முகவேல் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.
