ஆட்சியாளர்கள் மன்னர், இளவரசன் மன நிலையில் இருக்கின்றனர்: வானதி சீனிவாசன்!

தமிழகம் கட்டுப்பாடற்ற நிலையில் இருக்கிறது. ஆட்சியாளர்கள் மன்னர், இளவரசன் மன நிலையில் இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். நேற்று நள்ளிவு ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒருபக்கம் திருப்பூர் மாவட்டத்தில் புகாரை விசாரிக்க சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலு சம்பவ இடத்தில் வைத்தே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மறுபக்கம் கோவை பெரியகடை வீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற ராஜன், காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை கண்டித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சி அடைந்த பாரதம் என்று கூறுவது சமுதாயத்தில் பெண்களுடைய முன்னேற்றத்தையும் உள்ளடக்கியது. வீட்டிற்கும், நாட்டிற்கும் பெண்களுடைய முன்னேற்றம் வளர்ச்சி மிகவும் அவசியமானது. கோவை மக்கள் சேவை மையம் பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக சுயம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் 1,500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து, தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சான்றிதழும் வழங்குகிறோம். எனவே அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் கடன் உதவியை எளிதாக பெற முடியும்.

இந்தியாவிலேயே ஒரு முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை சொல்கிறார்கள். இன்றைக்கு சிவகங்கை மாவட்டம் நாட்டாக்குடி என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த கிராமமும் காலி செய்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய அவமானம். ஒருபுறம் மிக வேகமாக நகர் மையமாகிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் தொழில் மையமும் அதிமாகிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மாநிலத்தில் ஒரு குக் கிராமத்தில் சூழல் இதுதான் என்று அரசாங்கத்தினுடைய கவனத்துக்கு செல்லாமல் சென்றது எப்படி என்று புரியவில்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம், மன்னராக அப்பாவும், இளவரசனாக மகனும் இந்த தமிழ்நாடே ஏதோ அவர்களுக்கு தான் சொந்தம் என்பது போல பாவனைகள் இருக்கிறது. அவர்களுடைய அரசாங்கம் அனைவருக்குமான அரசாங்கம் இல்லை என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. அந்த கிராமத்தில் எதற்காக மக்களை இப்படி காலி செய்ய சொல்லியிருக்கிறார்கள், அவர்களின் தேவைகள் என்ன என்பதை மாவட்ட ஆட்சியர், மாநில முதலமைச்சர் ஆகியோர் கவனம் செலுத்தி கிராமத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அதேபோல காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதல்.. தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மறுபக்கம் காவல் நிலைய அதிகாரிகள் மீது திமுக கட்சிக்காரர்கள் தாக்குதல், காவல்துறை சுதந்திரமாக செயல்படாததால் நிறைய கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு கிடக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகம் இன்று கட்டுப்பாடற்ற சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.