மத்திய அமைச்சர் ஆகும் ஆசையில் பாஜகவுடன் துரை வைகோ நெருக்கம் காட்டி வருவதாக மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா குற்றம்சாட்டி இருக்கிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையில் மோதல் நிலவி வருகிறது. இதற்கு துரை வைகோ முக்கியக் காரணமாக இருந்து வருகிறார். வைகோவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்லை சத்யா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் மல்லை சத்யா செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், மத்திய அமைச்சர் ஆகும் ஆசையில் பாஜகவுடன் துரை வைகோ நெருக்கம் காட்டி வருகிறார். வைகோ வேண்டுமானால் திமுக கூட்டணியை விரும்பலாம். ஆனால் துரை வைகோ பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.
துரை வைகோ மீதான மல்லை சத்யாவின் குற்றச்சாட்டு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் 12 தொகுதிகள் வரை கேட்போம் என்று கூறி வந்த துரை வைகோ, திடீரென சைலண்ட் ஆகிவிட்டார். கடந்த சில வாரங்களாகவே திமுக தலைமையுடன் வைகோ அதிக நெருக்கம் காட்டி வருகிறார். திமுக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம் என்றும், இந்துத்துவ சக்திகளைத் தமிழ்நாட்டில் கால் பதிக்க விட மாட்டோம் என்று வைகோ கூறி இருக்கிறார். மதிமுக உடனான திமுகவின் உறவில் ஏற்பட்ட பிளவு காரணமாக வைகோ இப்படிப் பேசி வருவதாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் டெல்லியில் துரை வைகோவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. வைகோவுக்கு மாநிலங்களவை எம்பி பதவியும், துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் பதவியும் கொடுக்க பாஜக முன் வந்தது. இந்த பேச்சுவார்த்தை திமுக தலைமைக்குத் தெரிய வந்தது. இதனால் மதிமுகவின் இடத்தை தேமுதிகவை வைத்து நிரப்ப திமுக முடிவு எடுத்தது. இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களாக பிரேமலதா விஜயகாந்த் திமுக மீது கடுமையான விமர்சனங்களை வைக்கவில்லை. பிரேமலதா உடனான முதல்வரின் சந்திப்பு முடிவடைந்த அடுத்த நாளே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக ஸ்டாலினை அவரது இல்லத்திலேயே சந்தித்தார். ஆனாலும் துரை வைகோவின் அமைதி பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
ஏனென்றால் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், திமுக கூட்டணியில் உள்ள கட்சியுடன் பேசி வருகிறோம். அவர்கள் ஏற்கனவே தங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிதான் என்று கூறி இருந்தார். தற்போது மல்லை சத்யாவும் துரை வைகோவின் பாஜக நெருக்கம் குறித்துப் பேசி இருப்பது பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
