எல்லாமே தனியார்மயம் என்றால் அரசாங்கம் எதுக்காக இயங்குது?: பிரேமலதா!

சென்னையில் தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்கள் போராட்டத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார். அப்போது தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், 23 ஆயிரம் சம்பளம் வழங்கி தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

சென்னையில் 10 வது நாளாக இன்றும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

மக்கள் நல பணியாளர்களிடம் நான் பேசியபோது அவர்கள் கூறியது என்னவென்றால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். எங்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக அரசு இப்போது இதனை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது என்று சொல்கிறார்கள். முன்பு 23 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தோம்.. இப்போது 13 ஆயிரம் தான் சம்பளம் வாங்குறோம். இது இப்போது உள்ள காலத்திற்கு ஏற்றதாக இல்லை. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் கூறினர்.

தேமுதிக சார்பில் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு ரூ.23 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்பது தான். இந்த நகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தூய்மை பணியாளர்கள் தான் காரணம். நேற்று மழை பெய்யும் போது கூட அவர்கள் அங்கேயே இருந்து போராடினார்கள். அவர்களுக்கு தேமுதிக ஆதரவு உண்டு. அவர்கள் கோரிக்கைக்கு நாங்கள் துணை நிற்போம்.

ஜெயலலிதா படத்தையும், என் படத்தையும் சேர்த்து எங்களது வாட்ஸ் அப் குரூப்பில் நிர்வாகிகள் படத்தை பகிர்ந்தனர். அந்த படத்தை சுதீஷ் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டு இருக்கிறார். அந்த பதிவு தான் வைரல் ஆகியிருக்கிறது. என்னை கேட்டால் நான் ஏற்கனவே சொன்னது தான். ஒரு சூரியன்.. ஒரு சந்திரன் தான்.. அதே மாதிரி ஒரு எம்ஜிஆர்.. ஒரு ஜெயலலிதா.. ஒரு கருணாநிதி.. ஒரு கேப்டன் தான்.. ஒருவருடைய இடத்தை மற்றொருவர் வந்து நிரப்ப முடியாது. அதே மாதிரி ஒரு பிரேமலதா விஜயகாந்த் தான். என் இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது. ஒருத்தருக்கு பதில் இன்னொருவர் வர முடியாது. ஜெயலலிதா இரும்பு பெண்மணி அவரை போல் யாரும் வர முடியாது. எவ்வளவோ சவால்களை சந்தித்து இருக்கிறார்.

அரசியலில் யாரை ரோல் மாடலாக எடுப்பீர்கள் என்று என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது நான் கூறினேன். நம்ம தமிழ்நாட்டிலேயே இருக்கின்ற ஆளுமை.. முதல்வராக பல சவால்களை சந்தித்த.. இன்றைக்கு இரும்பு பெண்மணியாக.. அயர்ன் லேடியாக இருப்பவர் தான் என்னுடைய அரசியல் ரோல் மாடல் என்று கூறினேன்.. அதனால் தான் இன்று அது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியுள்ளது. அப்போது நீங்கள் கேட்கலாம் ஏன் நீங்க மட்டும் விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது? நீங்க மட்டும் ஏன் ஜெயலலிதா படத்தை பயன்படுத்துனீங்க என்று கேட்கலாம். அதற்கு நான் பதில் கூறுகிறேன்.. கேப்டன் விஜயகாந்த் எம்ஜிஆரை தன்னுடைய மானசீக குருவாக நடிகராக இருந்தபோதே அறிவித்தவர். அவர் எல்லா பேட்டியிலும் என் மானசீக குரு என்று சொல்வார். எங்கள் தலைமை அலுவலகத்திலும் எம்ஜிஆர் சிலை இருக்கிறது. இதேபோன்று கேப்டன் விஜயகாந்த் தான் எங்களுடைய அரசியல் மானசீக குரு என்று சொன்னால் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அரசியல் லாபத்துக்காக விஜயகாந்த் படத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். எல்லாமே தனியார்மயம் என்றால் அரசாங்கம் எதுக்காக இயங்குது?. இவ்வாறு அவர் கூறினார்.