பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணையாகச் சென்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானவரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கிடையே குளறுபடிகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்றனர். இதில் பிரியங்கா காந்தி, திமுக எம்பிக்கள் கனிமொழி, டிஆர் பாலு மற்றும் சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ், சரத் பவார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்ற எம்பிக்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் கூறியுள்ளதாவது:-
சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம்.
அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம். மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது. தேர்தல் ஜனநாயகம் ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
