பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு.வெங்கடேசன்!

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களிடையே பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர், உரையாடியிருந்தார். அப்போது அவர் உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமான் என்று கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், “பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.சு.வெங்கடேசன் விமர்சித்திருக்கிறார்.

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் மாணவர்களுடன் அனுராக் உரையாற்றினார். அப்போது மாணவர்களிடம்,விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பியிருந்தார். மாணவர்கள்: ஒருமித்த குரலில் “நீல் ஆம்ஸ்ட்ராங்” என பதிலளித்தனர். அனுராக் தாக்கூர்: “எனக்குத் தெரிந்து ஹனுமான்ஜி தான் விண்வெளிக்கு சென்றார்” என கூறியிருந்தார். இந்த உரையாடல் வீடியோவாக வெளியான நிலையில், அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

உலகின் முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின். சோவியத் யூனியைனை (ரஷ்யா) சேர்ந்த இவர், கடந்த 1961ம் ஆண்டு சோவியத் ரஷ்யவின் வோஸ்டோக் 1 விண்கலம் மூலம் 327 கி.மீ உயரத்திற்கு பறந்து சென்றார். 108 நிமிடங்கள் வரை அவர் விண்வெளியில் பூமியை சுற்றி வந்தார். இவரை தொடர்ந்து நான்கு மாதங்கள் கழித்து மற்றொரு வீரர் விண்வெளிக்கு பயணிதிருந்தார். அவரும் சோவியத்தை சேர்ந்தவர்தான். அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளிக்கு சென்ற 21வது நபர். இந்த தகவலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, அனுராக் தாக்கூருக்கு பாடம் எடுக்க தொடங்கியிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.சு.வெங்கடேசன், அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திக்கிறார். “முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விஷயமல்ல, பாஜக வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது. நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்” என தனது எக்ஸ் தளத்தில் வெங்கடேசன் பதிவிட்டிருக்கிறார்.