பொங்கல் பரிசுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தல்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி ஜனவரி 4ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்களும் கரும்பும் இடம்பெற்றுள்ளது.

1088 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு இந்தப் பரிசு பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்றும், அனைத்து ரே‌ஷன் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரே‌ஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன.

அவர்களை ஒவ்வொரு நாட்களில் நேரத்தை குறிப்பிட்டு பொங்கல் பரிசு பொருட்களை பெறுவதற்கு வரவழைக்க டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படும். பொதுமக்களை சமூக இடைவெளி, கிருமி நாசினி, முககவசம் போன்றவற்றை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வினியோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் என்றும் அரசு குறிப்பிட்டு உள்ளது.