நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்: நிதின் கட்கரி

நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும், கட்டண வசூலிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிதின் கட்கரி கூறியதாவது:-

நாடு முழுவதும் 5 கோடியே 56 பாஸ்ட்டேக்குகள் அளிக்கப்பட்டிருகிறது. தற்போது நாளொன்றுக்கு 120 கோடி ரூபாய் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் பெறப்படுகிறது. நாடு முழுவதும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும். இதனால் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலையோ, வாகன நெரிசலோ இருக்காது. அதே நேரம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்றுமுறையில் வசூலிக்க இரண்டு வழிகளை அரசு பரிசீலித்து வருகிறது.

வாகனங்களில் பொருத்தப்படும் ஜி.பி.எஸ் கருவி மூலம் வங்கி கணக்கிலிருந்து நேரடியாகவோ அல்லது கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு கொண்ட நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு மென்பொருள் தயாரித்து கட்டணத்தை வசூலிக்கவோ திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் புதிய வழிகளில் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். சுங்கச்சாவடிகளின் அருகில் வசிப்பவர்களுக்கு சுங்கவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.