அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை தொடர அனுமதி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி, அமலாக்கத்துறை விசாரணையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டுள்ளது.