தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை வீசிய சீனா!

தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது. தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது.

தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இந்தநிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்தது. மேலும், தைவானை சுற்றி கடலில் போர் பயிற்சிகளை தீவிரமாக நடத்தியது. சில இடங்களில் தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது. இதனால் தென்சீன கடல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றதால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடியை நிச்சயம் கொடுப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தைவானின் கின்மென் தீவுகளில் சீன டிரோன்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தைவான் ராணுவத்தின் கின்மென் பாதுகாப்பு கமாண்டர் சாங் சுங் கூறும்போது, “சீன டிரோன்கள் (ஆளில்லா விமானம்) நேற்று இரவு கின்மென் பகுதிக்குள் பறந்தன. அவைகளை விரட்ட உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தோம். நெருப்புகளை வீசி எச்சரிக்கை விடுத்தோம். இதையடுத்து டிரோன்கள் திரும்பி சென்றன. தைவானின் வெளியுறவுத் தீவுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறித்த உளவுத் தகவல்களை சேகரிக்க டிரோன்கள் பயன்படுத்தப் படுகின்றன” என்றார்.

இந்தநிலையில் இன்று தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது. அங்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்பு இல்லாத வகையில் மிகப்பெரிய ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது. இன்றுமுதல் வருகிற 7-ந்தேதி வரை சீன ராணுவத்தின் முக்கியமான ராணுவ பயிற்சி நடைபெறும் என்று தைவானின் வரை படத்தில் போர் பயிற்சி நடைபெறும் இடங்களை சுட்டிக்காட்டி அப்புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தைவான் ராணுவம் தரப்பில் கூறும்போது, “தைவானை சுற்றியுள்ள நீரில் முன்னோடியில்லாத வகையில் நடைபெறும் சீனாவின் பயிற்சிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மோதலுக்கு தயாராக இருந்தாலும் அதை நாங்கள் விரும்பவில்லை என்றது.

சீனா தனது ராணுவத்தின் போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளதால் தைவான் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் தென்சீன கடல் பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது. போர் பயிற்சி நடக்கும் பகுதிகளில் கப்பல்கள், விமானங்கள் குறிப்பிட்ட கடல்பகுதிகள், வான் வெளிக்குள் நுழையக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தைவான் விமானங்கள் செல்லும் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தைவானை சுற்றி போர் பயிற்சி நடத்துவதற்கு சீனாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறும்போது, ‘சீனா செய்வது (போர் பயிற்சி) பொறுப்பற்றது என்று நாங்கள் நம்புகிறோம். ஏவுகணை சோதனை, துப்பாக்கி சூடு பயிற்சி, போர் விமானங்கள் பறந்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடக்கும்போது சில வகையான சம்பவங்கள் (தாக்குதல்) நிகழும் சாத்தியம் உள்ளது’ என்றார். இதேபோல் சீனாவுக்கு ஜி-7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை உயர் பிரதிநிதி ஜோசப் பொமுரல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தைவான் கடல் பகுதியில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சீனா சோதனை நடத்தியதாக தைவான் தெரிவித்துள்ளது. தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளுக்கு அருகே மொத்தம் 11 டாங்ஃபெங் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா ஏவியுள்ளதாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் போர் ஒத்திகைக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ரஷ்யா – உக்ரைன் போரைத் தொடர்ந்து சீனா – தைவான் போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

மேலும் தைவானை ஓட்டியுள்ள தீவு பகுதியில் இருந்து ராணுவ ஒத்திகை நடத்த இருப்பதால், தைவான் வான்வழியை சுற்றி ஆறு வழிகளை ‘ஆபத்தான பகுதியாக’ அறிவித்த சீனா, இதில் விமானங்களை இயக்க வேண்டாம் என ஆசிய நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தென்கொரியா, தைவானுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்கள், பாதுகாப்பை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே சீனாவின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத ஜப்பான், வழக்கம்போல தைவானுக்கு விமானத்தை இயக்குவோம் என தெரிவித்துள்ளது. சீனாவின் இத்தகைய நடவடிக்கை காரணமாக தைவான் வான்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.