நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் ‛தகைசால் தமிழர்’ விருது!

தமிழ்நாடு அரசு சார்பில் ‛தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் நலன் வளர்ச்சிக்காக பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் ‛தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை கடந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. 2ம் ஆண்டுக்கான விருது யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‛தகைசால் தமிழர்’ விருதுவுக்கு நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட துவங்கினார். விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்துள்ளார். ஏழை எளிய மக்களுக்காக குரல்கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். மேலும் தன்னலமற்ற அரசியல்வாதியாக தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்து வரும் நிலையில் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நல்லகண்ணுவுக்கு “தகைசால் தமிழர் விருது’ வழங்க தேர்வு குழுவினர் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதை இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வழங்க உள்ளார். தமிழகத்தில் ‛தகைசால் தமிழர்’ விருது வழங்குவது இது 2வது முறையாகும். கடந்த முறை சங்கரய்யா பெற்ற நிலையில் இந்த முறை நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் சங்கரய்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதும், நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.