பாகிஸ்தான் பத்திரிகையாளர் தலிபான்களால் கடத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல்!

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அனஸ் மல்லிக் ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அனஸ் மல்லிக். இவர் இந்தியாவில் உள்ள வியான் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஆப்கானிஸ்தானுக்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றார். அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவு பெறுவதை பற்றியும், அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் அல்-கொய்தா தலைவன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டது தொடர்பாகவும் செய்தி கேசரிக்க சென்றார். இந்த நிலையில் அனஸ் மல்லிக் திடீரென்று மாயமானார். அவரை தலிபான்கள் கடத்தி சென்றதாக தகவல் வெளியானது. இதை அவரது நண்பர்கள் தெரிவித்தனர். அனஸ் மல்லிக்கின் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் தூதரகம், தலிபான் அரசிடம் தகவல் கேட்டது. அதன் பின் பத்திரிகையாளர் அனஸ் மல்லிக் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தலைநகர் காபூலில் பத்திரமாக இருப்பதாகவும், அவருடன் தூதரகம் தொடர்பில் இருக்கிறது என்பதையும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி உறுதிப்படுத்தினார்.

தலிபான்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அனஸ் மல்லிக் கூறும்போது, “செய்தி சேகரிப்பதற்காக காபூலுக்கு சென்றடைந்த போது என்னிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. அப்போது தலிபான்கள் சிலர் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் கடத்தி சென்றனர். எனது செல்போனை பறித்து கொண்டனர். நான், கார் டிரைவர் உள்பட குழுவினர் பயங்கரமாக தாக்கப்பட்டோம். எங்களின் கைகள், கண்கள் கட்டப்பட்டு தலிபான்களால் விசாரிக்கப்பட்டோம். பின்னர் வேறு அறைக்கு மாற்றப்பட்ட நான் நேற்று விடுவிக்கப்பட்டேன்” என்றார். அனஸ் மல்லிக்கின் கார் டிரைவர் மற்றும் குழுவினர் தலிபான்கள் பிடியில் உள்ளனர்.