தைவான் ராணுவமும் போர் ஒத்திகையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது!

தைவான் எல்லையில் போர் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது சீன ராணுவம். இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால், தென் சீன கடல்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, கடந்த 3ம் தேதி சீனாவின் கடும் எச்சரிக்கையும் மீறி தைவான் நாட்டிற்குச் சென்றார். ஏற்கனவே தைவான் நாட்டின் ஒரு பகுதி தமக்கு சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், பெலோசியின் வருகையை சீனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் கடும் கோபத்திற்கு ஆளான சீனா, பெலோசியை அனுமதித்த தைவான்மீது பொருளாதார தடை விதித்தது. மேலும் மிரட்டும் தொணியில் கடல் பகுதி உட்பட தைவான் எல்லையைச் சுற்றி, ஆறு இடங்களில் போர் ஒத்திகை நடத்தியது. இதன் காரணமாக தைவான் ஜல சந்தியில் கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பயிற்சியை ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சீனா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என தைவான் ராணுவம் பதில் அளித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தாண்டியும் சீனா போர் பயிற்சிகளை தொடர்ந்து வருவதால், தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவான் ராணுவமும் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்து இருக்கிறது. அதேநேரம் போர் ஒத்திகை ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான் எனவும், இது பதிலடி இல்லை என்றும் தைவான்அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் தென் சீன கடல் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இச்சம்பவம் சீனா மற்றும் தைவானுக்கு இடையே போர் சூழல் ஏற்படுமா எனும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.