ரேஷன் கடைகளில் 20 ரூபாய் கேட்டு கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது: ராகுல்

நமது நாட்டு கொடியும் தேசப்பற்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் உள்ளது, ஆனால் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களிடம் கொடிக்காக 20 ரூபாய் கேட்டு கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் வட மாநிலங்களில் ரேஷன் கடைகளில் 20 ரூபாய்க்கு கட்டாயப்படுத்தி தேசிய கொடி விற்கப்படுவதாகவும், கொடியை வாங்கவில்லை என்றால் ரேசன் பொருட்கள் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில் தன்னிடம் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பணம் இருக்கிறது அந்த பணத்தில் கொடியை வாங்கி விட்டால் எங்கள் வீட்டில் உண்பதற்கு உணவு இல்லை என ஒருவர் கூறுவதும், ஆனால் கொடி கட்டாயம் வாங்க வேண்டும் என தொழிலாளர் வலியுறுத்துவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டு, கொடிப்பற்றும் தேசப்பற்றும் நம் நாட்டின் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் உள்ளது. அதே நேரத்தில் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களிடம் 20 ரூபாய்க்கு தேசிய கொடியை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது எனவும், எப்போதும் தேசப்பற்றை விற்க முடியாது எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக மூவர்ண கொடி மட்டுமின்றி நம் நாட்டின் ஏழைகளின் சுயமரியாதையையும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு தாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. எம்.பி வருண் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ரேஷன் கார்டுதாரர்கள் தேசியக் கொடியை வாங்கும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர். அவர்களுக்கு உரிமையுள்ள உணவு தானியங்கள் மறுக்கப்படுகின்றன. தேசிய கொடிக்கான விலைக்காக ஏழைகளின் உணவைப் பறிப்பது வெட்கக்கேடானது” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தீயாகப் பரவியதை அடுத்து, அந்த ரேஷன் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்களின் வசதிக்காகத்தான் ரேஷன் கடையில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. விருப்பப்படுபவர்கள் அவற்றை வாங்கிக்கொள்ளலாம். கட்டாயப்படுத்தி வாங்கச் சொன்னால் அது குறித்து புகார் செய்யலாம் என மாவட்ட ரேஷன் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.