ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்!

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் உட்பட ஆளும் திமுக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நாட்டின் 76வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார். நாடு முழுக்க மாநில தலைநகரங்களில் மாநில முதல்வர்கள் கொடி ஏற்றி மரியாதையை செய்தனர். சென்னை, கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின். அதன்பின் சுதந்திர தின விழாவில் பல்வேறு சாதனையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

பொதுவாக குடியரசுத் தினம், சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தரப்படும். ஆளுநர் மூலம் அளிக்கப்படும் இந்த நிகழ்விற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சட்டபையில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் கடந்த குடியரசுத் தினத்தின் போது நடத்தப்பட்ட தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுகவினர் இதில் கலந்து கொள்ளவில்லை. கடந்த குடியரசுத் தின தேநீர் விருந்தை ஆளும் திமுக புறக்கணித்தது. விசிக, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகளும் இந்த நிகழ்வை புறக்கணித்தன. ஆளுநர் ரவி நீட் தேர்வு மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை என்று கோபத்தால் ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இதை புறக்கணித்தன. மாறாக அதிமுக, பாஜக தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் வரவேற்றார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, மேயர் பிரியா மற்றும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், கவிஞர் வைரமுத்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது. இதனை கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் ரசித்து பார்த்தனர். 75-வது சுதந்திர தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கலைக்குழுவினருக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து சிறிய அளவிலான காந்தி உருவச்சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார். தேநீர் விருந்து நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து கொண்ட நிலையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.