ஆசிரியர் தாக்கி தலித் சிறுவன் பலி: அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் தாக்கியதில் 9 வயது தலித் சிறுவன் பலியான சம்பவம் ஆளும் அசோக் கெலாட் அரசுக்கு சொந்த கட்சியில் இருந்தே நெருக்கடி அதிரிகரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சுரானா அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவன் படித்து வந்தான். 9 வயதே ஆன அந்த சிறுவன சம்பவத்தன்று பள்ளியில் இருந்த தண்ணீர் பானையில் இருந்து டம்ப்ளரில் தண்ணீர் எடுத்து குடித்திருக்கிறான். இதை கவனித்த அந்த பள்ளியின் ஆசிரியர் சைல் சிங் என்பவர், அந்த சிறுவனை ஏன் இந்த தண்ணீரை குடித்தாய் என்று அடித்து தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த சிறுவன் குஜராத் மாநிலம் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்தான். இந்த சம்பவம் ராஜஸ்தானில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுவனை அடித்த ஆசிரியரை கைது செய்த போலீஸ், கொலை மற்றும் எஸ்.சி,எஸ்.டி சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

உயர் சாதியினருக்கு என வைக்கப்பட்டு இருந்த குடிநீரை சிறுவன் அறியாமல் குடித்துவிட்டதாகவும், இதைப் பார்த்த ஆசிரியர் சைல் சிங், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த உனக்கு இந்த பானையில் இருந்து தண்ணீர் குடிக்க எவ்வளவு திமிரு இருக்க வேண்டும் எனக்கூறி கடுமையாக சிறுவனை தாக்கியதாகவும் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும். சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடும் அளிக்கப்படும்” என்று பேசினார். எனினும் ஆசிரியர் சைல் சிங் தாக்கியதால் மாணவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராஜஸ்தானில் தலித் சிறுவன் ஆசிரியர் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அங்கு ஆட்சியில் இருக்கும் அசோக் கெலாட் அரசிற்கும் கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. ஒருபக்கம் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அசோக் கெலாட் அரசை கடுமையாக சாடி வருகிறது என்றால், சொந்தக் கட்சியில் இருந்தே அசோக் கெலாட்டிற்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருப்பது அவருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. தலித் சிறுவன் பலியான சம்பவத்தை கண்டித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்சந்த் மேக்வால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தையும் அனுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ”9 வயதே ஆன சிறுவன் உயிரிழந்தது தன்னை கடுமையாக காயப்படுத்தியதாகவும், ஜாதி ரீதியான சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் போலீசார் துரிதமாக இந்த விவகாரத்தில் செயல்படவில்லை என்றும்” அசோக் கெலாட்டை விமர்சித்துள்ளார்.

அதேபோல், ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், அசோக் கெலாட் அரசை கவிழ்க்கப்போவதாக 2 ஆண்டுகளுக்கு முன் அச்சுறுத்தல் விடுத்தவருமான சச்சின் பைலட், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை சந்திக்க ஜலோர் மாவட்டம் புறப்பட்டு சென்றுள்ளார். தலித் சமூக மக்களுக்கு முன்னதாக சச்சின் பைலட் கூறுகையில், “ஜலோர் போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம் என்பதை தலித் சமூக மக்களுக்கு நாம் உறுதி அளிக்க வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் காலத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய சம்பவங்களில் அரசியல் செய்யக்கூடாது” என்றும் கூறினார்.

பாஜக விமர்சனம் இந்த விவகாரத்தில் அசோக் கெலாட்டை கடுமையாக சாடிய பாஜக, ”குழந்தையின் உயிரிழப்பு வெட்ககேடானது. ராஜஸ்தானில் உள்ள தலித்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அசோக் கெலாட்டிற்கு எப்போது ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஆலோசனை கொடுப்பார்கள்” என விமர்சித்தது.