மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை: கனிமொழி

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரித்தொகையை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது என்று தி.மு.க. மகளிரணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கூறினார்.

நாகர்கோவிலுக்கு இன்று தி.மு.க. மகளிரணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வந்தார். அவர் கூறியதாவது:

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் இப்போது பெண்களுக்கான கல்வி உதவித்திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக பெண்களுக்கு எதிரான திட்டம் அல்ல. பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டம். உயர்கல்விக்குச் செல்லும் பெண்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு எதிரானது என்று தவறான, பிற்போக்கான கருத்துக்களை பரப்பிக்கொண்டு வருகிறார்கள்.

பெண்களின் கல்வி, பெண்களின் எதிர்காலத்தை இன்னும் சக்திவாய்ந்ததாக, கல்வி என்ற ஆயுதத்தோடு எதிர்த்து நிற்கும் விதமாக இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் உயர்கல்விக்கு போகக்கூடிய மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கக்கூடிய திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தி.மு.கவும் முதல்-அமைச்சர் ஸ்டாலினும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் எந்த மாறுபாடும் கிடையாது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரித்தொகையை இன்னும் வழங்காமல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் ஏற்படும்போது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியையும் வழங்காமல் இருக்கிறார்கள். அடிப்படையாக தமிழகத்துக்கு வரவேண்டிய எதுவுமே வந்து சேர்வது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.