ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம்: உக்ரைன் எச்சரிக்கை!

ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய உக்ரைன் இடையே ஏற்பட்ட போர் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது. இந்த போரை தடுத்து நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்து வந்தன. இந்தியாவும் இந்த விவகாரத்தில் பெரும் பங்கு வகித்தது. இந்நிலையில் உக்ரைனில் வருகிற 24 ஆ ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது . இதனை முன்னிட்டு ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் கிரிமியா பகுதிகளில் நடத்தப்பட்ட புதிய குண்டுவெடிப்புகள் மற்றும் அங்குள்ள அணுமின் நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர். மேலும் பிவ்டெனுக்ரைன்ஸ்க் அணுமின் நிலையத்தில் நேற்று நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மற்றும் உக்ரைனின் மிகப்பெரிய ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகே புதிய குண்டுவெடிப்பு தாக்குதல் ஆகியவற்றால் போரின் போது அணு விபத்து ஏற்படலாம் என்பது பற்றிய புதிய அச்சத்தை தூண்டியுள்ளது.
உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், தொடர் குண்டுவெடிப்புகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மக்கள் அனைவரும் வரும் வாரத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வருகிற 24ம் தேதியன்று உக்ரைனில் சுதந்திர தினம் வருவதையொட்டி அங்கு தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாக பேசியுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த வாரம் ரஷ்யா குறிப்பாக அசிங்கமான, குறிப்பாக தீய செயலைச் செய்ய முயற்சி செய்யலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரும் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் ஏற்கனவே தயாராகி வருகிறது என்றும் பெலாரஸிலிருந்து மட்டுமல்ல, கருங்கடல் மற்றும் ரஷ்யாவிலிருந்தும் எதிரி ஒரே நேரத்தில் மூன்று பக்கங்களிலிருந்தும் தாக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.