ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் வங்காளதேச பிரதமர் சந்திப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்காரை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவுக்கு நேற்று வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹசீனாவுக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறையிலான சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹசீனா, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின்பு, பிரதமர் மோடியுடனான சந்திப்பு இன்று நடந்தது. இதில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை தலைவர்கள் மறுஆய்வு செய்ததுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் இன்று ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.

இதன்படி, குஷியாரா ஆற்றின் நீரை திரும்ப பெறுதல், விண்வெளி தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுதல், ரெயில்வே துறை பயன்படுத்த கூடிய சரக்கு இயக்கம் போன்ற பிரிவுகளில் தகவல் தொழில்நுட்ப திட்டங்களை ஒருங்கிணைப்பது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வங்காளதேச ரெயில்வே அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தல், நீதிமன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தல் மற்றும் பிரசார் பாரதி மற்றும் வங்காளதேச தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு இடையேயான ஒளிபரப்பில் ஒத்துழைப்புடன் செயல்படுதல் ஆகிய 7 பிரிவுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டு உள்ளன.

டெல்லியில் ராஷ்டிரபதி பவனுக்கு சென்ற ஷேக் ஹசீனா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். இதுபற்றி ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷேக் ஹசீனாவை வரவேற்கும்போது, நம்முடைய பகிரப்பட்ட வரலாறு, மொழி மற்றும் கலாசாரம் ஆகியவை நம்மை ஒருவருடன் ஒருவர் இணைக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார் என தெரிவித்து உள்ளது. இந்த சந்திப்பில், பிரதமர் மோடி மற்றும் பிரதமர் ஹசீனா தலைமையின் கீழ், இரு தரப்பு உறவுகள் அதிகம் வளர்ச்சி அடைந்தன என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்காரை ஹசீனா சந்தித்து பேசினார். இதுபற்றி தன்கார் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இரு நாட்டு மக்களின் நலன்களுக்காக, நல்லுறவை முன்னெடுத்து செல்லும் வகையிலான இரு நாட்டின் பகிரப்பட்ட ஈடுபாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினோம் என தெரிவித்து உள்ளார்.

வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, பிரதமா் மோடி இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது:-

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான வா்த்தகம் வேகமாக வளா்ந்து வருகிறது. தற்போது இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தகக் கூட்டாளி நாடுகளுள் ஒன்றாக வங்கதேசம் திகழ்ந்து வருகிறது. தகவல்-தொழில்நுட்பம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையே மின்சாரத்தைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது. அதற்கான பேச்சுவாா்த்தை இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்று வருகிறது.

வங்கதேசத்துடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா விரைவில் தொடங்கவுள்ளது. பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையில் வங்கதேசம் வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. அந்நாட்டுடன் இந்தியா கலாசார ரீதியிலான நல்லுறவைப் பகிா்ந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு பெரும் வளா்ச்சி கண்டுள்ளது. இருதரப்பு, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். வெள்ளத் தடுப்பு விவகாரங்களில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. வெள்ளம் தொடா்பான தகவல்களை வங்கதேசத்திடம் இந்தியா தொடா்ந்து பகிா்ந்து வருகிறது.

பயங்கரவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. பரஸ்பர நம்பிக்கையை அச்சுறுத்தும் அத்தகைய சக்திகளை ஒருங்கிணைந்து எதிா்கொள்வது மிகவும் அவசியம். இந்தியா-வங்கதேசம் இடையே 54 நதிகள் எல்லைகடந்து பாய்கின்றன. அந்த நதிகள் பல நூற்றாண்டுகளாக இரு நாட்டு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன. இவ்வாறு பிரதமா் மோடி கூறினார்.

பிரதமா் ஷேக் ஹசீனா செய்தியாளா்களிடம் கூறுகையில், ’’வங்கதேசத்தின் முக்கியமான, நெருங்கிய அண்டைநாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியா-வங்கதேசம் இடையே நிலவி வரும் நல்லுறவானது, அண்டை நாடுகள் இடையேயான சிறந்த தூதரக நல்லுறவுக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. இந்தியா-வங்கதேசம் இடையே பாயும் தீஸ்தா நதிநீரைப் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் இறுதிசெய்யப்பட வேண்டும். இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான பல்வேறு பிரச்னைகளுக்கு நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் தீா்வுகண்டுள்ளன. தீஸ்தா நதிநீா்ப் பகிா்வு உள்ளிட்ட மற்ற பிரச்னைகளுக்கும் விரைந்து தீா்வுகாணப்படும் என நம்புகிறேன். சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகள் நிறைவை இந்தியா அண்மையில் கொண்டாடியது. அதற்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்’’ என்றாா்.