நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியை சந்தித்த அனிதாவின் சகோதரர்!

இரண்டாவது நாள் நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியை சந்தித்த அனிதாவின் சகோதரர் மனு அளித்தார்.

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் இரண்டாவது நாள், கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் பகுதியிலிருந்து தொடங்கியது. இரண்டாவது நாள் நடைப்பயணத்தை ராகுல் காந்தி கொடியசைத்துத் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தின் இடையே, கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னம் மற்றும் தந்தை சண்முகம் ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது, அனிதாவின் இழப்புக்கு, ராகுல் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். ராகுலிடம், அனிதாவின் சகோதரர் மணிரத்னம் ஒரு மனுவை அளித்தார். தனது சகோதரியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மணிரத்னம் அளித்திருந்த அந்த மனுவை ராகுல் படித்துப் பார்த்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று ராகுல் உறுதி அளித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை தேசியக்கொடி வழங்கி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தாா். இதையொட்டி, கன்னியாகுமரி வந்த ராகுல் காந்தி, தனிப்படகில் திருவள்ளுவா் சிலை வளாகத்துக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், விவேகானந்தா் நினைவு மண்டபம் சென்று, அங்கு விவேகானந்தா் சிலை, தேவி பகவதியம்மன் ஸ்ரீ பாதப் பாறை, ராமகிருஷ்ண பரமஹம்சா், சாரதாதேவி மண்டபங்களை பாா்வையிட்டு வணங்கினாா்.

பின்னா், கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்துக்குச் சென்றாா். அங்கு அவரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். காந்தி மண்டபத்தில் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டாா். அங்குள்ள காந்தி அஸ்தி கட்டடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடைப் பயணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.