வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது: அண்ணாமலை!

மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், தான் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம், திமுக எம்.பிக்களின் வலியுறுத்தல் என தொடர் முயற்சிகளின் விளைவாக இப்போது வெற்றி மாலை கிடைத்திருக்கிறது, சமூகநீதி வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற நேரத்தில் நிகழ்த்தியுள்ள சாதனை இது எனக் குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள், மிகுந்த நலிந்த நிலையில் இருந்த போதிலும், பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தமையால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறிப் போய்க் கொண்டிருந்தன. இந்த நிலை மாற, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்கள், மத்தியில் காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில் இருந்து, தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். பல காலமாக இவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக, கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் தமிழக பாஜக அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை எல்லாம் எடுத்துக்கூறினர். தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக போராடியும் திமுக காங்கிரஸ் அரசுகள், அவர்களை உதாசீனப்படுத்தியதை மிகுந்த வலியுடன் எடுத்துக் கூறினர். எங்களை சந்தித்து உங்கள் குறைகளை எடுத்து உரைத்துள்ளீர்கள். பாரத பிரதமரின் கவனத்திற்கு இதையெல்லாம் கொண்டுசென்று, அனைவருக்கும் விரைவில், நல்ல பதில் சொல்வேன் என்ற உறுதியை நான் அளித்திருந்தேன்.

அதேபோல புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டக் கூட்டத்தில், அங்கே திரளாக வந்திருந்த நரிக்குறவர்களின் பலத்த ஆரவாரத்திற்கு மத்தியில், அவர்களின் கோரிக்கை விரைவில் மத்திய அரசால் நிறைவேற்றி வைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தேன். பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட கவனத்திற்கும், மத்திய அரசின் எஸ்.டி பிரிவினரின் பதிவாளர் கவனத்திற்கும், இம்மனுக்களைக் கொண்டு சென்று, நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை பழங்குடியினர் எஸ்.டி. பட்டியலில் சேர்க்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் தமிழக பாஜகவால் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகைசெய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. 1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டியின் பரிந்துரை நரிக்குறவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே. 1967ஆம் ஆட்சிக்கு வந்த திமுக இதைச் செய்ய தவறியது ஏன்? குறைந்த சதவீத வாக்குகள் உள்ள சமுதாயத்தால் என்ன பயன் என்று உதாசீனப்படுத்தியது தான் திமுக செய்த ஒரே சாதனை. 1965 ஆம் ஆண்டு முதல் தங்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போராடி கொண்டிருந்த, நரிக்குறவர் சமுதாய மக்கள், தங்களின் நாற்பதாண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய அரசுக்கும், தங்களின் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மத்திய அரசின் ஆட்சியும் அதிகாரமும் தங்கள் கையில் இருந்த போதும், மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த போதும், நரிக்குறவர் இன மக்களின் கோரிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்ட திமுக, பிரதமர் அவர்களின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும், வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது. விடியல் வருகிறது விடியல் வருகிறது என்று கூவிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, உருப்படியாக எதுவும் மக்களுக்குச் செய்யவில்லை. ஒருவேளை இந்த ஆட்சி முடிந்த பிறகுதான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல் வரும் போலும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.