திமுக மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகல்!

தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்பி. சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2009 ல் எனது எம்பி., பதவி முடிந்ததும் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கட்சி பணியை மட்டும் தொடர்வதாக அப்போதைய தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்திருந்தேன். தொடர்ந்து 2021 தேர்தலில் அரும் பணியாற்றி முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இவர் மக்கள் போற்றும் வகையில் ஆட்சி புரிந்து வருகிறார். இந்த மன நிறைவோடு நான் எனது நீண்ட கால ஆசையை நிறைவேற்றி கட்சி பொறுப்பில் ( திமுக துணை பொது செயலர் ) இருந்து விலகி கொள்கிறேன். இதற்கான கடிதத்தை ஆக.29 ம் தேதி ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்து விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசனும் தி.மு.க., காரர். சமீபகாலமாக மனைவிக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்ததால், கடுப்பான கணவர் ஜெகதீசன் தி.மு.க.,வையும், கட்சி தலைமையையும் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் எழுதி கொண்டிருந்தார். கணவரின் விமர்சனத்திற்கு சுப்புலட்சுமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, சுப்புலட்சுமியின் சம்மதத்தோடு தான் ஜெகதீசன் விமர்சனங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கட்சி மீது தனக்கு இருந்த அதிருப்தியை கணவர் மூலம் சுப்புலட்சுமி காட்டியதாக கட்சியினர் பேசிக்கொண்டனர். இனிமேல், தி.மு.க.,வில் தனக்கு எதிர்காலம் இருக்காது என்று, நன்கு தெரிந்ததால் தான் சுப்புலட்சுமி கட்சிக்கு முழுக்கு போட்டுள்ளார். தி.மு.க., ஆளுங்கட்சியாக இருக்கும் நேரத்தில், ஆளுங்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பதவி விலகியது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாகவே எனது ராஜினாமா குறித்து ஒவ்வொரு தகவல்கள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். அதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகியதாக கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதியே கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்துள்ளேன். நான் பெரியார் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு உள்ளேன். வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே விலகினேன். ஓய்வுபெற தேவையில்லை என்றால் தொடர்ந்து தி.மு.க.விலேயே இருந்திருப்பேன். நான் ஏன் வேறு கட்சிக்கு செல்லப்போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.