கேரள கவர்னர் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர்: பினராயி விஜயன்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர் என்று, முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கேரள சட்டசபையில் சமீபத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்-மந்திரியே செயல்பட வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சட்டதிருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்க போவதில்லை என கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். மேலும் அவர் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

கவர்னர் தான் மாநில மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். எனவே கவர்னரின் அதிகாரத்தை மாநில அரசால் குறைக்க முடியாது. கடந்த 2019-ம் ஆண்டு கண்ணூர் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு சென்ற என் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. அப்போது போலீசார் அவர்களின் கடமையை செய்யவிடாமல் முதல்-மந்திரியின் தனி அலுவலர் தடுத்துள்ளார். இது எதிர்ப்பாளர்களின் குரலை ஒடுக்க அரசு முயற்சிப்பதை காட்டுகிறது, என்றார்.

கவர்னர் ஆரிப் முகமது கானின் குற்றச்சாட்டுக்கு பதிலடி அளிக்கும் வகையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

கவர்னர் பதவி என்பது அரசமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி. அப்பதவியை தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடாது. மாநிலத்தில் செயல்படும் எதிர்கட்சிகளை போல கவர்னர் நடந்து கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆதரவாகவே அவர் நடந்து கொள்கிறார். கம்யூனிச கொள்கைக்கும், அதன் சித்தாந்தத்திற்கும் எதிராகவே நடந்து கொள்கிறார். கேரளத்தில் கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கவர்னர் மாளிகையில் செய்தியாளர் கூட்டத்துக்கு கவர்னர் நேற்று ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அங்கு சில வீடியோக்களை ஒளிபரப்பினார். தனக்கும், அரசு தரப்புக்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான ‘ஆடியோ’க்களையும் வெளியிட்டார். இதன் பின் கவர்னர் ஆரீப் முகமது கான் கூறியதாவது:-

கண்ணுார் பல்கலையில் என்னை தாக்குவதற்கு சிலர் முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது, தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரி ஒருவர், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தார். அந்த வீடியோவைத் தான் இங்கு ஒளிபரப்பினேன். முதல்வரின் தனிச் செயலராக பணியாற்றும் கே.கே.ராகேஷ் தான், அந்த அதிகாரி. கவர்னர் மாளிகையின் பணி நியமனங்களில் மாநில அரசு தலையிட்டது. இது தொடர்பான உரையாடல்கள் தான் தற்போது ஒலிபரப்பப்பட்டன. அதிருப்தியாளர்களின் குரல்களை ஒடுக்க, மாநில அரசு முயற்சிக்கிறது. பல்கலைகளில் கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. இதை மாநில அரசால் குறைக்கவோ, தடுக்கவோ முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.