மியான்மரில் தவிக்கும் இந்தியர்கள்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாகவும், அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரியவருவதாகவும், ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர் என்பது தற்போது தெரிய வருவதாகவும், மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலை அளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருவதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளதாகவும், அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர் என்றும், மியான்மரில் சட்ட விரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்னை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மாண்புமிகு பிரதமர் அவர்களின் அவசர தலையீட்டை கோருவதாகவும் தனது கடிதத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி முரளிதரன் கூறியுள்ளார். இது குறித்து மத்திய இணை மந்திரி முரளிதரன் டுவிட்டரில் பதிவிடுள்ளதாவது:-

மியான்மரில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது தூதர் வினய் குமாரிடம் பேசினோம். அவர்களை பத்திரமாக மீட்பது குறித்து இந்திய தூதர் என்னிடம் விவரித்தார், மேலும் இந்தியர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.