சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார், லாலு சந்திப்பு!

நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

இந்தியாவில் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பீகாரில் பாஜகவை கழற்றிவிட்டு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனை அவர் மறுத்துள்ளார். இருப்பினும் பாஜகவுக்கு எதிராக வலுவான அணி அமைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுஒருபுறம் இருக்க பீகாரில் கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு என்பது சுமார் ஒரு மணிநேரம் வரை நடந்தது.

இந்த சந்திப்பின்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக செயல்படுவது தொடர்பான வியூகம் பற்றி விவாதித்ததாக சொல்லப்படுகிறது. இதுதவிர 2024ம் ஆண்டில் பாஜகவுக்கான எதிரான கொள்கையில் உள்ள கட்சிகளை ஓரணியில் திரட்டுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மூன்று பேரும் கருத்து பரிமாற்றம் செய்துள்ளனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு சோனியா காந்தியின் வீட்டில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் வெளியே வந்தனர். இருவரும் கைகள் கோர்த்து தலைக்கு மேலே உயர்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அதன்பிறகு நிதிஷ் குமார் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாங்கள் இருவரும் சோனியா காந்தியை சந்தித்து பேசினோம். நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றிணைந்து செயல்படுவது பற்றி சோனியா காந்தியுடன் பேசினோம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்த சந்திப்பு குறித்து சோனியா காந்தி விரிவாக பேச உள்ளார். இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.

இந்த சந்திப்பு பற்றி ராஷ்டீரிய ஜனதா தளம் வெளியிட்டுள்ள செய்தியில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு காரணங்களுக்காகவும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதன்படி, சோனியா காந்தியிடம் இருந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பற்றிய ஓர் உடன்பாடு எட்டப்படுவதற்கான ஒப்புதலை பெறுவதற்கான உறுதிமொழியை எங்களது கட்சி கேட்டு பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.