ராஜஸ்தானில் 90 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா மிரட்டல்!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் புதிய முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் ராஜினாமா செய்வோம் என 90க்கும் அதிகமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் காங்கிரசுக்கு தாவிய 6 பேரும் அடங்குவர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக 13 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 12 பேர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர். பாஜக கட்சிக்கு அங்கு 72 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர பிற கட்சிகளுக்கு எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். துணை முதல்வராகவும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் சச்சின் பைலட் உள்ளார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தல் அக்டோபர் மாதம் 17 ம் தேதி நடக்கிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடாத நிலையில் அவர்களின் ஆதரவுடன் அசோக் கெலாட் போட்டியிடுகிறார்.

தற்போது காங்கிரஸ் கட்சியில் ஒருநபர் ஒரு பதவி நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் அசோக் கெலாட் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதனால் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று அசோக் கெலாட் வீட்டில் காங்கிரஸ் சட்டசபை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சச்சின் பைலட்டை முதல்வராக தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2020 ல், சச்சின் பைலட் 18 எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் அவரை முதல்வராக தேர்வு செய்யக்கூடாது. மாறாக அந்த இக்கட்டான சமயத்தில் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக நின்ற எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என கூறினர்.

இந்நிலையில் தான் தங்கள் சொல்வதை கேட்காமல் கட்சி மேலிடம் சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 90 எம்எல்ஏக்கள் வரை தங்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக மிரட்டுகின்றனர். இதற்கு மத்தியில் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறுகையில், ‛அசோக் கெலாட் முதல்வராக தொடர வேண்டும். இல்லாவிட்டால் அசோக் கெலாட் ஆதரவாளர் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும். சச்சின் கெலாட்டை முதல்வராக்க விடமாட்டோம்’ என்றனர். இதனால் ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று மாலையில் காங்கிரஸ் எம்எல்ஏ சாந்தி தரிவால் வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர், ஆதரவு எம்எல்ஏக்கள் என 70 பேர் பங்கேற்றனர். இதில் 2020ல் 18 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதை சுட்டிக்காட்டி அவருக்கு முதல்வர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த சமயத்தில் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.