ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் ஆளில்லா பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் இருவர் காயமடைந்துள்ளனர். இது குறித்து ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் இல்லாத பேருந்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. பயணிகள் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அருகில் இருந்த இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல மற்ற வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என உதம்பூர் டிஐஜி சுலேமான் சவுத்ரி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடப்பதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னர் இதே மாவட்டத்தில் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒரே நாளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து இந்த சம்பவத்தையடுத்து காவல்துறையினர் மற்றும், ராணுவம் சம்பவம் நடந்த பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் என்னவென இதுவரை தெரியவில்லை ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ராணுவம் மற்றும் காவல்துறை என இரண்டு தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.